பாபு மற்றும் ரவி

அன்று காலை மணி 7.00.சென்னையின் சேரி பகுதி.ஓரு மூலையில் இருந்த குடிசை.உள்ளிருந்து எழுந்து வந்தான் பாபு.இன்னும் தூக்கம் முழுவதுமாக களையவில்லை.
"எவண்டா இந்த ஸ்கூல கண்டுபுடிச்சது.பெரிய தொல்லையா இருக்கு"  என எல்லா சிறுவர்களையும் போல முணுமுணுத்து விட்டு குளிக்கச் சென்றான்.குளித்தவுடன் சூடாக இரண்டு இட்லி வைத்தார் அவன் அம்மா .
"அம்மா பசிக்குது.இன்னும் ஒரே ஒரு இட்லி வைம்மா.

"கண்ணா மாவு தீர்ந்து போச்சுடா.நாளைக்கு சாப்புடலாம் .செல்லமுல "என்றார் அம்மா.

சாப்பிட்டு முடித்துவிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினான் பாபு.தினமும் நடந்துதான் போக வேண்டும்.அவனது தந்தையும் தாயும் கட்டிட வேலை செய்பவர்கள்.அதனால் வருமானம் மிக குறைவு.பாபு தன் அப்பாவிடம் பலமுறை சைக்கிள் வாங்கித் தர சொல்லி அழுதிருக்கிறான்.ம்ஹூம் .ஒன்றும் நடந்த பாடில்லை.அடுத்த வாரம் வாங்கி விடலாம் என சமாதானம் சொல்லி அனுப்பி வைப்பார்..மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.மெதுவாக நடந்து கொண்டிருந்தான் பாபு.அவனுக்கு தோழர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.அதனால் எப்போதுமே தனிமை தான்.தனிமை மட்டும் தான்.அந்த தனிமையின் பாதையிலேயே பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தான்.திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் அவன் அருகே வந்து நின்றது. நன்கு வாரிய தலைமுடி,பளிச்சென்ற முகம்,தூய்மையான உடை என ஒரு நபர்.அமைதியாய் சிரித்தார்.அவர் கண்கள் முழுதும் அமைதி நிறைந்திருந்தது.

"தம்பி போற வழியில இருக்குற கவர்மெண்ட் ஸ்கூல் தான.ஏறிக்கோ."

பாபு திறுதிறுவென விழித்தான்.பார்க்க நல்ல மனிதராக தான் தெரிகிறார்.

"சரி.அவரே கேக்குறார்.ஏறிக்குவோம்"

பாபு தயக்கத்துடன் ஏறி உட்கார்ந்து கொண்டான் .மெதுவாய் வண்டி நகர்ந்தது.மோட்டார் சைக்கிளை பள்ளி அருகே நிறுத்தினார் அந்த நபர்.பாபு கீழே இறங்கினான் .அவர் முகத்தை மகிழ்ச்சியுடன் பார்த்து  "டாட்டா அங்க்கிள் " என ஓட்டமெடுத்தான்.அவரும் சிரித்துக் கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

ஒரு சிறிய இடைவெளியில் அந்த நபரைப் பற்றி பார்த்துவிடுவோம்.பெயர் ரவி.வயது 24.ஒரு நிறுவனத்தில் கணினி பொறியாளராக வேலை செய்கிறார்.நல்ல சம்பளம்.சொந்த ஊர் திருநெல்வேலி.தாம்பரத்தில் ஒரு வாடகை வீட்டில் தனியாக தங்கியிருக்கிறார்.ஒரு சிறிய உதவி தானே என்று பாபுவை பள்ளியில் ட்ராப் செய்திருக்கிறார்.அவ்வளவு தான்.அவ்வளவே தான்.

அன்றைய வகுப்புகள் முடிந்தன.பாபு தன் பையை தோளில் மாட்டிக்கொண்டு கடகடவென நடையைக் கட்டினான்.வந்த வழியிலேயே வீட்டை நோக்கி நடந்தான்.சிறிது தூரம் நடந்திருப்பான்.காலையில் வந்த அதே மோட்டர் சைக்கிள்.அதே நபர்.அதே சிரிப்பு.இந்த முறை அவர் சொல்லாமலேயே பாபு வண்டியில் ஏறிக்கொண்டான்.வீட்டை நெருங்கியதும்  "அங்கிள் . வண்டியை நிறுத்துங்க.வீடு வந்திருச்சு".

வண்டியை ஓரமாக நிறுத்தினார் ரவி.சட்டென்று இறங்கி ஒரு சிரிப்புடன் அவருக்கு விடை கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்.அன்று இரவு அவனுக்கு தூக்கமே இல்லை.சிந்தித்துக் கொண்டே இருந்தான்.

"யார் அந்த அங்கிள்?திடீர்னு வண்டிய நிறுத்தினார்.அவரே வண்டியில ஏத்திக்கிட்டு போய் பள்ளியில விட்டார்.யாரு அவரு ?"

கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் போதே பாலுவிற்கு தூக்கம் வந்துவிட்டது.தூங்கிவிட்டான்.காலையில் வழக்கம் போல் எழுந்து குளித்து சாப்பிட்டான் .இன்று இட்லி கிடைக்கவில்லை.பழைய சோறுதான்.பள்ளியை நோக்கி நடந்தான்.அதே மோட்டார் சைக்கிள்.அருகே வந்து நின்றது.ஏறினான்.மாலையிலும் அதே மோட்டார் சைக்கிள்.வீடு வந்து சேர்ந்தான்.இதே போல பல வாரங்கள் தொடர்ந்தன .ஒருநாள் ரவி
"தம்பி உன் பெயர் என்ன ?எந்த க்ளாஸ் படிக்குற?" 
.  பாபு அவனைப் பற்றியும் பள்ளியை பற்றியும் கூறினான்.

ஒருநாள் போகும் வழியில் ஒரு ஐஸ் வண்டியை கடந்தது மோட்டார் சைக்கிள்.பாபு அதை ஏக்கத்துடன் பார்த்தான்.அவன் முகத்தில் இருந்த ஏக்கத்தை முன் கண்ணாடி வழியே பார்த்துவிட்டார் ரவி.உடனே வண்டியை நிறுத்தினார்.ஐஸ் வண்டி அவர்கள் அருகே வந்து நின்றது.
"டேய் பாபு.என்ன ஐஸ் சாப்புடுற.குல்பி பிடிக்குமா ?"

பாபுவின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போனது.உடனே தலையை ஆட்டினான்.குல்பியை சுவைத்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கி பள்ளிக்குள் ஓடினான் பாபு..
சில நாட்கள் கழிந்தன.மாலை பாபுவை கூப்பிட வந்தார் ரவி.ஆனால் அவனோ பள்ளிக்கூட வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.ரவி அவன் அருகே சென்று
"டேய் பாபு.ஏன்டா அழுவுற?என்னாச்சு?டீச்சர் அடிச்சுட்டாங்களா ?"
அவன் நிறுத்தவில்லை.அழுதுகொண்டே இருந்தான்.
"இன்னும் ஸ்கூல் ஃபீஸ் கட்டல.அதான் டீச்சர் உள்ள விடமாட்டிங்குறாங்க"

"அப்படினா இன்னக்கி முழுதும் நீ க்ளாஸ்க்கு போகலையா"

"ஆமா.அப்பாகிட்ட கேட்டுட்டேன்.அவர்கிட்டயும் காசு இல்லையாம்"

"எவ்வளவு பணம்டா பாபு ?"

"1000 ரூபா"

"சரிவிடுறா.வண்டியில ஏறு.நாளைக்கு பாத்துக்கலாம்.முதல கண்ணீர தொட"

கண்ணீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டே வண்டியில்  ஏறினான்.அன்று பாபு தூங்கவே இல்லை.எப்படி பள்ளிக்கு கட்டணம் செலுத்துவதென்று பயந்து கொண்டே இருந்தான்.அவனது பெற்றோர்களிடமும் பணம் இல்லை.

மறுநாள் பள்ளியில் வாசலில் பாபுவை இறக்கிவிட்டார் ரவி.ஒரு கவரை நீட்டி

"பாபு.இங்க நில்லு.இந்தா வச்சிக்கோ"

"என்ன அங்கிள் இது ?"

"இதுல 1000 ரூபா இருக்கு.நீ ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு சொன்னியே.அதுக்குதான்."

"எனக்கா?நிஜமாவா?"

"ஆமாடா பாபு.உனக்குதான் .நேரே போய் டீச்சர்கிட்ட குடுத்துறு.இன்னக்கி சாயங்காலம் ஒரு முக்கியமான இடத்துக்கு போவோம்."

பாபுவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.எப்படியோ பணம் கிடைத்துவிட்டது.ஆனால் அன்று தான் அவன் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குள் போனான்.

அன்று மாலை மோட்டார் சைக்கிளை ஒரு பூங்காவிற்குள்ளே திருப்பினார் ரவி.அது ஒரு கட்டண பூங்கா.நபருக்கு 5ரூபாய் கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும்.அதனால் பாபு அந்த பக்கமே திரும்பி பார்த்ததில்லை.இரண்டு பேருக்கும் 10 கட்டினார் ரவி .

"வாடா பாபு உள்ளே போகலாம்"என்றார்ரவி .
அன்று பாபுவிற்கு மிகவும் மகிழ்ச்சியான நாள்.அங்கிருந்த அனைத்திலும் விளையாடினார்கள்.ராட்டினம்,ஊஞ்சல்,சீசா அனைத்தும்.ரவியும் அங்கே ஒரு குழந்தையாகிப் போனார்.வயதொத்த சிறுவர்களைப் போல இருவரும் விளையாடி மகிழ்ந்தனர்.

ரவியின் கைக்கடிகாரத்தை பார்த்தான் பாபு. "அய்யோ!அங்கிள் நேரமாயிருச்சு.வாங்க வீட்டுக்கு போகலாம்.அங்கிள் வாங்க போகலாம்."

ரவி இன்னும் ராட்டினத்தில் சுற்றிக் கொண்டுதான் இருந்தார்.இவ்வளவு கத்தியும் ஏன் கீழே இறங்க மறுக்கிறார்.ஆனால் ரவியின் தலை சாய்ந்தது.அவர் கண்கள் இருண்டன.திடீரென மயங்கி கீழே விழுந்தார்.பாலுவின் இதயத்துடிப்பு எகிறியது.பூங்காவில் இருந்த மற்ற அனைவரும் அவரைச் சுற்றி கூடினார்கள்.அங்கிருந்த ஒரு நபர்   "ஏப்பா யாராவது சீக்கிரம் வாங்க.இவரை தூக்கி கொண்டுபோய் பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரியில சேத்துரலாம்.வேகமா வாங்க"

ரவி பூங்காவிற்கு அருகில் இருந்த மருத்துவமனைகள் அனுமதிக்கப் பட்டார்.சிறுவன் என்பதால் என்ன நடக்கிறதென்பதே பாபுவிற்கு புரியவேயில்லை.அவனும் மருத்துவமனைக்குள் ஓடினான்.மருத்துவர்கள் அவசர அவசரமாக வந்து ரவியை பரிசோதித்தார்கள்.ரவி அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.பாபுவும் உள்ளே நுழைந்தான்.ஒரு மருத்துவமனை ஊழியர் அவன் சட்டையை பிடித்து அவனை நிறுத்தினார்.

"டேய்!எங்கடா போற.யார் நீ?இங்க எல்லாம் நீ வரவே கூடாது.வெளிய போ"

பாவம் சிறுவன்.என்ன செய்ய முடியும்.தேம்பி அழுதான்.அழுதுகொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.வீட்டிற்கு வந்ததும் அவன் அம்மா சரமாரியாய் திட்டினார்.

"எவ்வளோ நேரமாடா உன்ன தேடுறது.சொல்லிட்டு போக வேண்டியதுதான. எங்க போய் தொலஞ்ச?"

அம்மாவின் இப்பேச்சு பாலுவை மேலும் தாக்கியது.மனம் உடைந்து போனான்.சிறிது நேரத்தில் அவனுடைய அம்மா அருகில் வந்தார்

"பாபு குட்டி.கோப படாதடா.உன்ன காணோமுனு அம்மா பயந்தே போயிட்டேன்.இந்தா சாப்புடு ராஜா என் கண்ணுல"

அம்மா ஊட்டிய மூன்று தோசைகளும் இடைவெளி இல்லாமல் உள்ளே போனது.சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்கச் சென்றான்.படக்கென்று எழுந்து உட்காரந்தான்.ரவியின் நினைவு அவனுக்கு வந்தது.அவருக்கு என்ன ஆனதென்று பாபுவிற்கு இன்னும் தெரியவில்லை.குழப்பத்துடனே அன்று தூங்கிவிட்டான்.காலை. வழக்கம்போல பள்ளிக்கு போனான்.வகுப்பறையிலும் ரவியின் நினைப்புதான்.

"அவருக்கு என்ன ஆனது?ஏன் திடீர்னு கீழ விழுந்தாரு?ஏன் அவர ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போனாங்க?"

யோசித்துக்கொண்டே இருந்தான்.பாவம் 8 வயது சிறுவன் என்பதால் பாபுவிற்குஎதுவும் விளங்கவில்லை.அன்று மாலை வீட்டிற்கு போக அவனுக்கு மனம் இல்லை.அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான்.அவனுடைய கண்கள் வேகமாய் ரவியைத் தேடியது.எல்லா அறைகளுக்குள்ளும் ஓடினான்.எங்கு தேடியும் ரவியைக் காணவில்லை.மனம் படபடத்தது.தனியாக காட்டில் விட்டவனைப் போல தவித்தான்.நேரே அங்கிருந்த ஒரு செவிலியரிடம் போய்,

"நேத்து ஒரு அங்கிள் வந்தாரே ?அவரு எங்க?"

"அங்கிளா?அவரு பெயரு என்னப்பா?"

"பெயரு?அவரு பெயரு?"
விழித்தான் பாபு.

இவ்வளவு நாட்கள் ரவியுடன் பழகியுள்ளான்.ஆனால் கடைசிவரை அவருடைய பெயரை அவன் கேட்டுத் தெரிந்துகொள்ளவே இல்லை.அவரும் சொல்லவில்லை.
அந்த செவிலிய பெண் சாதுவாக

"தம்பி.இங்க எல்லாம் இப்படி தனியா வரக்கூடாது.வீட்டுக்குப் போ ."  சொல்லிவிட்டு நடையைக் கட்டினார் அந்தப் பெண்.

அவனுக்கு என்ன செய்வதென்று புரியவேயில்லை.ரவியை எப்படி கண்டுபிடிப்பது?அவர் எங்கே இருக்கிறார்?எப்படி இருக்கிறார்? எதுவும் அவனுக்கு தெரியவில்லை.சோர்ந்த முகத்துடன் வீட்டிற்கு கிளம்பினான்.

சிறிது நேரத்தில் ஒரு கார் மருத்துவமனை அருகே வந்து நின்றது.உள்ளிருந்து ஒரு முதியவர் வெளியே வந்தார்.உடன் ஓர் வயதான பெண்.அது அவருடைய மனைவி.அவர்கள் ரவியின் பெற்றோர்.பெரும் அழுகையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள்.நேரே பிணவரையை நோக்கி ...உள்ளிருந்து ஒரு உயிரற்ற உடலை எடுத்து வந்தார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.துணியால் மூடப்பட்டு இருந்தது.முகம் சரியாக தெரியவில்லை.
ஆ!அது ரவிதான்.ரவியே தான்.

மருத்துவர் ரவியின் பெற்றோரின் அருகே வந்து

"அவருக்கு ரொம்ப நாட்களா மூளையில கேன்சர் இருந்துருக்கு.ஆனா அவரு எந்த விதமான சிகிச்சையும் எடுக்கலனு நினைக்கிறேன்.அதான் திடீர்னு இறந்துட்டாரு.சாரி சார்"

மருத்துவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.அந்த முதியவர்களுக்கு கண்களில் கண்ணீர பெருக்கெடுத்தது.பாவம்.என்ன செய்வார்கள்.அவர்களுடைய ஒரே மகன்.ரவியின் உடல் திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப் பட்டது.அங்கேயே அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

பாபு வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான்.ஆனால் அவன் கால்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்தது.அந்த இடம் முழுவதும் தேடினான்.மீண்டும் மீண்டும் தேடினான்.தினமும் தேடிக்கொண்டு இருக்கிறான்.ஆனால் அவனால் ரவியை காண முடியவே இல்லை.ஒருநாள் தனக்குள் முடிவு செய்துகொண்டான் பாபு .

"நானும் அந்த அங்கிளை போல பெரிய ஆளா வந்தவுடன்,நல்லா படிச்சு ,நிறைய பசங்களுக்கு உதவுவேன்.

மறுநாள் பள்ளிக் கூடத்திற்கு வீரநடை போட்டு நடந்தான் .

                 முற்றும்
                           -க.அசோக் ராஜ்
                               28/07/2014

Comments

  1. Supar story..anaithu manithanum oru nilamaiyil anbai matrumey ethirparkiran..silaruku kidaithu vidikrathu silarku athu kidaipathlai .kidaikathuku karanangal irukalam .antha tharunathl than sirukulathaigalai athigam nechikum vaipugal amaikrathu.athai pola than intha kadai.migavm nalla pakirvu

    ReplyDelete
  2. Really nice... Go ahead wit ur thoughts...al te best man....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை