Posts

Showing posts from 2019

டீ போடு ஸ்ட்ராங்கா டீ போடு

Image
ஏதோ டீ தினமாமே   :) சிறுவயதில் தாத்தாவுடன் காலை நடை செல்லும் போது, டீக்கடைக்கு அழைத்துச் செல்வார். அவர் பின்னே கொஞ்சம் ஒளிந்து கொண்டு காப்பி வேண்டுமெனக் கேட்டுக் குடிப்பேன். அக்கடையில் டீயுடன் சிகரெட்டை ஊதிக் கொண்டிருப்பவர்களெல்லாம் கெட்டவர்களன்றி வேறு யாராகவும் இருக்க முடியாதென எண்ணிக் கொண்டிருந்த காலம். இப்போதும் சிரிப்பாகத் தானிருக்கிறது . கல்லூரி முடித்து வேலையின்றி ஊரில் திரிந்து கொண்டிருந்த ஏதோவொரு சுபயோக தினத்தில், ஒரே நாளில் 3 முறை பேருந்து நிலையம் இறைவன் அருள் டீக்க டைக்கு அழைத்துச் சென்று ஆரம்பித்து வைத்தான் மணி. இன்றும் முடிந்த பாடில்லை.   :)   . காலையில் எழுந்தாகிவிட்டதா டீ, போராடிக்கிறதா டீ, வருத்தமா டீ, ரயிலுக்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறதா டீ, நண்பர்கள் சந்தித்திருக்கிறோமா டீ, இன்றைக்கு நாள் மகிழ்ச்சியாக இருக்கிற மாதிரி இருக்கிறாதா டீ, போன டீயைக் குடித்து ஒரு மணி நேரம் ஆகி விட்டதா , போடு அடுத்த டீயை. எந்தவொரு நாளும் டீயின்றிக் கழிந்ததில்லை. ஆனால் மேலே சொன்னாதெல்லம் வீட்டில் போடுகிற தேநீருக்குப் பொருந்தாது என்பதையறியவும்   :)   . கண்ணாடி தம்ளர் இ

காந்தி காத்திருப்பார்

Image
எப்போதும் போன்றதொரு காந்தி ஜெயந்தி. கூடவே அவரைப் பற்றிய அவதூறுகளும் தென்படத் துவங்கிவிட்டன. வழக்கம் போல சுபாஷ் சந்திர போஸைப் பற்றிய பொய்யான மிகைப்படுத்தப்பட்ட ”நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?”பாணியிலான வரலாறுகள், அதையொட்டி காந்தியை இழிவு செய்து வசைபாடுவதென ஒவ்வொரு காந்தி ஜெயந்தியும் கடந்துபோகத் தான் செய்கிறது. ”போஸ் ஹிட்லரைப் பார்த்தார். தன் முதுகில் கை வைக்கும் தைரியம் ஹிட்லருக்கு மட்டுமே இருக்கிறதென்றார். முத்துராமலிங்கத் தேவர் தன் தளபதியென ஹிட்லரிடம் சொன்னார்” “போஸ் ஆங்கிலப் படையை துவம்சம் செய்தார். டெல்லியை நெருங்கினார். அவர் புகழ் பரவக் கூடாதென காந்தியால் சுதந்திரம் கிடைத்ததென பிரிட்டிஷ் அரசு அறிவித்தது “ “பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது காந்தி மௌனம் காத்தார்” “தன் தந்தை இறந்து கிடந்த போது தன் மனைவியுடன் காந்தி தனியறையில் உறவுகொண்டார்” “காந்தி ஒரு கோழை” “காந்தி ஒரு துரோகி” “காந்தி ஒரு காமுகன்” இத்தியாதி இத்தியாதிகள். நம் உண்மையான நோக்கம் தான் என்ன. போஸையும் பகத்சிங்கையும் உயர்த்துவதா அல்லது நம் அன்றாட தோல்விகளையும் கசப்புகளையும் மறைப்பதற்காக காந்தி

சுபாஷ் ஜெயித்தாரா ? காந்தி பின்வாங்கினாரா ?

Image
போஸிடம் பிரச்சனையில்லை. அவரது தேசபக்தியில் துளியும் சந்தேகமில்லை. அவரை இழிவு செய்ய வேண்டுமென்பதுஇம்மியளவும் நோக்கமில்லை. பிரச்சனையென்பது அவரின் ரசிகர்களெனச் சொல்லி சிறிதும் உண்மையில்லாத வரலாற்றைப் படைப்பவர்கள்தான். தன்னைச் சுற்றியிருக்கிற சிறிய கூட்டத்திற்கு தான் கற்பனை செய்தவற்றை வரலாறு எனச் சொல்லி நம்ப வைப்பது அத்தனை கடினமில்லைதான் . ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லையே ? போஸ் வெற்றி பெற்றாரா ? போஸ் போன்றோரின் ஆயுத வழிப் போராட்டத்தில் ஏன் காந்தி ஈடுபாடு கொள்ளவில்லை? தன் ஆயுதப் போராட்டுத்துக்கான ஆதரவைத் திரட்ட இத்தாலி, ஜெர்மனி , என ஐரோப்பிய நாடுகளனைத்திலும் முயற்சித்து எதுவும் நடக்காமல் , இறுதியில் ஒருவழியாக ஜப்பானின் உதவியைப் பெற்றார் போஸ். வேறென்ன வேண்டும் .ஜப்பான் இருக்கிறது, ஐஎன்ஏ ,இருக்கிறது ,உயிரைக் கொடுக்கும் வீரர்கள் இருக்கிறார்கள், நரம்பு புடைக்க தன்னம்பிக்கை இருக்கிறது. ஆனால் களத்தின் நிலை நாம் நினைப்பது போல் இருந்துவிடுவதில்லை. எதிரிலிருப்பது பிரிட்டன். உதவிக்கு அமேரிக்கா. சர்வ வல்லமை பெற்று ஐரோப்பாவை நடுங்க வைத்த ஹிட்லரையே வீழ்த்திய ஒரு கூட்டணி . அவர்களை
Image
தமிழ் கூறும் நல்லுகில் மென்பொருள் பொறியாளர்களைப் பற்றிய சித்திரம் என்னவாக இருக்கிறது. தமிழ் சினிமாக்களும் தொடர்ந்து ஒரு புனையப்பட்ட பிம்பத்தைத் தான் மீண்டும் மீண்டும் சொல்லிவருகின்றன. சாஃப்ட்வேர்காரன் என்றாலே ஒரு அம்மாஞ்சிப் பயல், எப்போதும் மூக்கிலே ஒரு கண்ணாடி, லட்சங்களில் ஏறுகிற ஊதியம் , வேலைக்குச் சேர்ந்த முதல் வருடம் ஒரு காரோ பைக்கோ , அடுத்த வருடமே அமெரிக்காவில் குடியுரிமை, அங்கிருந்து விடுமுறைக்குத் திரும்ப இங்கே வந்து “ஹோ. இண்டியா இஸ் வெரி டர்ட்டி” என்று சலித்துக் கொள்வது, அலுவலகத்தில் எந்நேரமும் ஒரு காதலி, சரக்கடித்துவிட்டு மேலும் கையில் ஒரு ஒரு பீருடன் கடற்கரைச் சாலைகளில் சர்ரென்று வண்டி ஓட்டுவது, நுனிநாக்கு ஆங்கிலம், இத்யாதி இத்யாதி இத்யாதிகள். இவை எல்லாமே உண்மையா என்றால், இவைகள் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது அல்லது அவர்களின் வாழ்வில் எவ்வளவு நேரத்தை இப்படிக் கழிக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. 90% சதவிகித நேரங்கள் இவை எல்லாவற்றையும் தாண்டிய சஞ்சலங்கள் தான் மிக மிக அதிகம். சரி , முதலில் இந்த வேலை எளிதாகக் கிடைக்கிறதா என்ன. ம்ஹூம். கல்ல
Image
பள்ளி மாணவர்களுக்கெல்லாம் கோடை விடுமுறை தொடங்கிவிட்டதென்பதை ஊரின் எந்தச் சாலையில் செல்லும்போதும் ஏழெட்டு சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடிகிறது. கோடை விடுமுறையென்றாலே கிரிக்கெட் இல்லாமல் வேறென்ன. சுரீரென்ற வெயிலையே எனர்ஜி ட்ரின்க்காகக் குடித்து விளையாடிய எங்கள் ஆட்டங்களெல்லாம் நினைவில் வந்து போகாதா என்ன. அதையெல்லாம் யோசிக்க வேண்டுமென்றால் ஒரு கொசுவத்திச் சுருளைச் சுற்றி ஒரு பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ....டிங் டிங் டிங் டிங்.. என்றைக்கும் உருப்படியான மட்டையென்பது இருந்ததே கிடையாது. கைப்பிடி இல்லாதது, பாதி உடைந்தது, விறகுக் கட்டை, கதவு செய்து மிச்சமென கீழே போட்டது இவைகளில் தானே அத்தனை ஆயிரம் ரன்களும் குவிக்கப்பட்டன. சரி பந்தாவது ? ஹும். பிளாஸ்டிக் பந்து போதாதா. அன்றைய பந்து ஆளுக்கு ஐம்பது காசுகள் வசூல் செய்து வாங்கப்பட்டு விடும். அப்படியென்றால் முந்தைய நாள் விளையாடிய பந்து ? யாரவது ஒரு சண்டாளன் ஏதோவொரு கிழவியின் வீட்டு மொட்டை மாடியில் அடித்து அன்றைய மேட்சுக்கு மூடுவிழா நடத்தியிருப்பான். சரி .ஸ்டெம்ப்புகள் உண