தமிழ் கூறும் நல்லுகில் மென்பொருள் பொறியாளர்களைப் பற்றிய சித்திரம் என்னவாக இருக்கிறது. தமிழ் சினிமாக்களும் தொடர்ந்து ஒரு புனையப்பட்ட பிம்பத்தைத் தான் மீண்டும் மீண்டும் சொல்லிவருகின்றன. சாஃப்ட்வேர்காரன் என்றாலே ஒரு அம்மாஞ்சிப் பயல், எப்போதும் மூக்கிலே ஒரு கண்ணாடி, லட்சங்களில் ஏறுகிற ஊதியம் , வேலைக்குச் சேர்ந்த முதல் வருடம் ஒரு காரோ பைக்கோ , அடுத்த வருடமே அமெரிக்காவில் குடியுரிமை, அங்கிருந்து விடுமுறைக்குத் திரும்ப இங்கே வந்து “ஹோ. இண்டியா இஸ் வெரி டர்ட்டி” என்று சலித்துக் கொள்வது, அலுவலகத்தில் எந்நேரமும் ஒரு காதலி, சரக்கடித்துவிட்டு மேலும் கையில் ஒரு ஒரு பீருடன் கடற்கரைச் சாலைகளில் சர்ரென்று வண்டி ஓட்டுவது, நுனிநாக்கு ஆங்கிலம், இத்யாதி இத்யாதி இத்யாதிகள். இவை எல்லாமே உண்மையா என்றால், இவைகள் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது அல்லது அவர்களின் வாழ்வில் எவ்வளவு நேரத்தை இப்படிக் கழிக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. 90% சதவிகித நேரங்கள் இவை எல்லாவற்றையும் தாண்டிய சஞ்சலங்கள் தான் மிக மிக அதிகம்.
சரி , முதலில் இந்த வேலை எளிதாகக் கிடைக்கிறதா என்ன. ம்ஹூம். கல்லூரியில் நடக்கிற நேர்முகத் தேர்வின் மூலக் போகிறவர்களின் எண்ணிக்கையெல்லாம் மிகச் சொற்பம். பெரும்பாலானோர் கல்லூரியில் வேலை கிடைக்காமல் குறைந்தது இரண்டு வருடங்களாவது சென்னையிலோ பெங்களூரிலோ வேலை தேடி அலைந்து,அந்நேரங்களில் பல மென்பொருள் மொழிகளில் பரிச்சயம் உண்டான பிறகுதான் வேலைக்குச் சேர முடிகிறது. வேலை கிடைத்துவிட்டதென நிம்மதியாக இருந்துவிட முடியுமா என்றால் அதுவும் இல்லை. ஒரு ப்ராஜகட்டைத் தொடங்கி , அதைச் செய்து முடிக்கிற நாளை முடிவு செய்து நன்றாகப் போய்க் கொண்டிருக்கிற மாதிரியான நேரத்தில் க்ளையண்ட் ஒரு மின்னஞ்சல் அனுப்புவார்.
“ஹலோ டீம் .வி நீட் டூ கம்ப்ளீட் தி ப்ராஜக்ட் ஆன் திஸ் ஃப்ரைடே.”
“படியளக்கிற கடவுளே, போன வெள்ளிக்கிழைமை தானே ஆரம்பித்தோம்.”
“அதனாலென்ன இந்த வெள்ளிக்கிழைமை முடித்துவிட வேண்டியது தான். ஆல் தி பெஸ்ட்”.
சரியென அவ்வை சண்முகி கமலஹாசன் மாதிரி ஃபாஸ்ட் ஃபார்வர்டில் தினங்களை ஓட்டி ,கட்டக்கடகடவென மென்பொருள்
எழுதி, தினமொரு மாறுதலைச் செய்து , டெஸ்டிங்கை முடித்து, தாமதங்களுக்கும் தவறுகளுக்குமான வசைகளைப் பெற்று, வேலைகளை நிறைவு செய்து வேர்வையைத் துடைத்து ஊதியத்தைப் பெற்று , அதை செலவு செய்வதற்கான நேரமெங்கே என திரும்பிப் பார்த்தால் எல்லாமே கடந்து போயிருக்கும். தினமொரு மொழி வரும், தினமொரு தொழில்நுட்பம் வரும், இடைவிடாது கற்றுக் கொண்டே இருப்பது அவசியம். இல்லையா. வெளியே எறியப் படுவோம். இதெல்லாம் போதாதென நண்பனின் நண்பனென ஒருவர் வந்து 
“தம்பி. ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கிறோம். ஒரு ஃசாப்ட்வேர் பண்ணிடலாமே. ரெண்டாயிரம் ஆவுமா” என்பார். அவரிடம் ஒசாமா பின்லேடனின் அட்ரசை விசாரித்து சட்டையை கிழித்துக் கொள்ளலாம் எனத் தோன்றும்.
ஹூம்.
சினிமாக்களோ, பிற எழுத்தாளர்களோ உண்மையான மென்பொருள் நிறுவன வாழ்க்கையைச் சொல்லாத போது, சக சாஃப்ட்வேர்காரன் தான் அசலாக ரத்தமும் சதையுமாக இவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இரா.முருகனுக்கு எத்தனை தான் நன்றி சொல்வது. . தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என நினைத்து எதேச்சையாகத் தான் திருப்பத் தொடங்கினேன் . அத்தனை சுவாரஸ்யமான கதை. வழுக்கிக் கொண்டு போகிற நடை . சிரிக்க வைக்கிற பகடிகள், சட்டென உணர்ச்சி வயப்பட வைக்கிற நிகழ்வுகள் .
நாய் வளர்ப்போர் சங்கத்துக்கு சாஃப்ட்வேர் எழுதுகிற சுதர்சன், அவனுக்கு ஒரே நாளில் காதலியாகிற சந்தியா, அங்கே நண்பராகிற ஜெஃப்ரி, அவ்தார் சிங்,பேய் மாதிரி உழைக்கிற ராவ், தாய்லாந்தில் இன்சூரன்ஸ் கம்பெனியில் இருக்கிற குன் தாங்க்லோர், பிச்சித் ,னாய் , மாயூரத்தில் சுதர்சனின் முறைப்பெண் புஷ்பா , கண்ணாத்தா. அத்தனை பேருமே எவ்வளவு அழுத்தமான பாத்திரங்கள். எந்தவொரு பாத்திரமும் கதையை நகர்த்துவதற்கென வெறுமனே வந்து போகவில்லை.
சராசரி மென்பொருள் இளைஞனின் வேலை, அதன் கடினங்கள் ,அவன் காதல் , குடும்பம் , பிரச்சனைகள் , அவன் எப்படி தன் ஒவ்வொரு நாளையும் கடந்து முடிக்கிறான் என்பதை இதைவிட சிறப்பாகச் சொல்லிவிட முடியுமாவெனத்
தெரியவலில்லை.
சுருக்கமாக கதையைச் சொல்லி முடிப்பதைவிட நீங்களே ஒரு முறை வாசித்து பாருங்களேன். 

Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை