கலைஞர்

சில நாட்களாய் கருணாநிதி என் நினைவுகளில் நடுவே மாபெரும்,ஆச்சரியமான மனிதனாய் பாய்ந்து கொண்டிருக்கிறார்.DARE TO FAIL என்ற புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருந்த பொழுது தான் அந்த ஆச்சரியத்தை உணர்ந்தேன்.அது ஒரு தன்னம்பிக்கை புத்தகம்.எடிசன்,ஆபிரகாம் லிங்கன் என பல சாதனையாளர்களின் வாழ்வில் நிகழ்ந்த சவால்களையும்,இன்னல்களையும்,தோல்விகளையும் அவற்றை அவர்கள் எதிர்கொண்டு வென்றதைப் பற்றியும் எழுதப் பட்டிருந்தது. நடுவே ஒரு பக்கத்தில் கருணாநிதியின் படத்துடன் ஒரு கட்டுரை.ஆம்,அவரே தான்.படித்தேன்.வியந்தேன்.அந்த புத்தகத்தில் இருந்த ஒரு செய்தி.கருணாநிதி  பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுக்கப்பட்டது.அதை  பார்த்து சிறு அதிர்ச்சி அடைந்த போதும்,அந்தச் சீட்டை மடித்து சட்டைப் பையினுள் வைத்துக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்.அன்று பொதுக்கூட்டம் முடிந்த பிறகு வேகமாக வீட்டை நோக்கிச் சென்றார்.அப்பொழுது தான் மற்ற அனைவருக்கும் விஷயம் தெரிந்தது.அவர் மனைவி பத்மாவதி இறந்துவிட்டிருந்தார்.அந்தச் செய்தி தான் சீட்டில் எழுதப் பட்டிருந்தது.இதுவே அரசியலில் அவர் கொண்டிருந்த பற்றைக் காட்டுகிறது.அரசியல் என்பது அவருடைய ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று.உறவுகளை விட அவர் பெரிதாக மதிக்கும் ஒன்று.எத்தனை இன்னல்களை கடந்து வந்திருக்கிறார் இந்த மனிதர்.எப்படி இத்தனைத் தோல்விகளையும் எதிகொண்டு அவரால் முன்னேறி வரமுடிந்தது.இத்தனை முதுமையிலும் தினம் பத்திரிக்கைகளுக்கு பேட்டிகள் அளிக்கிறார்,எழுதுகிறார்,ஒரு பெரும் கட்சிக்கு தலைமை தாங்குகிறார்,92 வயதிலும் அவரால் அடுக்கு மொழிகளுடன் பேசமுடிகிறது.மருந்துகளின் மூலம் உடல் பலத்தை மட்டுமே பெற முடியும்,அவைகளினால் மன வலிமையை தர இயலுமா?
 நிச்சயம் முடியாது.தான் கொண்டுள்ள கொள்கைப் பற்றுகள் தான் அவருக்கு இத்தனை மனவலிமைகளையும் அளிக்கிறது.அவர் தவறுகள் சில செய்திருந்தாலும்,அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள ஏராளமன விஷயங்கள் இருக்கின்றன.கருணாநிதியின் வாழ்க்கை நமக்குச் சொல்வது ஒன்றுதான்.எந்த மனிதனும் தன்னுடைய துறையின் மீது முழு ஈடுபாடு செலுத்தினால்  ,அவனால் எத்தனை உயரத்தையும் அடைந்து,வெற்றி காண முடியும்.

க.அசோக்ராஜ்
20/01/2015

Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை