ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

சரவணன் சந்தினின் “ஐந்து முதலைகளின் கதை” நாவலை போன வருடம் உயிர்மை விருதுகள் விழாவின் வாங்கினேன். அப்போது இந்த நாவல் தான் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருந்தது. ஆனால் ஏனோ அப்போது என்னால் படிக்க இயலவில்லை. 20 பக்கங்களுக்கு மேல் தாண்ட மாட்டேன் என்றது. சரியென்று கட்டுரைத் தொகுப்பு மாதிரி ஏதாவது ஒரு அத்தியாயத்தை எடுத்து நடு நடுவே வாசித்துப் பார்த்தேன். ம்ஹூம். ஒன்றும் நடக்கவில்லை. என்னுடைய வாசிப்பின் பிரச்சனையா, அல்லது அவருடைய மொழிநடையை  என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்லை . அதை அப்படியே மூடி வைத்து விட்டு அடுத்து வேறு நூல்களைப் படித்தேன்.  பல மாதங்களுக்கு பிறகு திடீரென புத்தக அலமாரியில் “ஐந்து முதலைகளின் கதை” தென்பட்டது. இப்போது படித்துப் பார்க்கலாம் என்று அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் “அட்டகாசம்” . அடித்து ஆடியிருக்கிறார் சரவணன் சந்திரன். ஒரே கல்ப்பில் படித்து முடித்துவிட்டேன். கட கடவென வழுக்கிக் கொண்டு போகிறது அவருடைய மொழிநடை. ஏன் இதை இத்தனை நாளாய் படிக்காமல் சும்மா இருந்தோம் என்று தான் தோன்றியது.
இந்த நாவல் இவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதற்கான காரணங்களுள் ஒன்று. இந்நாவல் நிகழும் கதைக்களம். நான் இதுவரை கேள்விப்பட்டிராத தைமூர் என்ற தேசத்தில் தான் பெரும்பாலான நிகழ்வுகள் நாவலில் நடக்கிறது.

நாவலின் கதையைச் சொல்ல வேண்டுமென்றால் மிகச் சுருக்கமாக சொல்லிவிடலாம். ஆனால் கதைக்கு மேலே வாசித்து அறிந்து கொள்ள இந்நாவலில் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அவற்றையும் பார்க்கலாம். முதலில் கதை. தைமூர் மிக காலதாமதமாக சுதந்திரம் பெற்று வளர்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்த தேசம். அங்கே இருக்கும் பெரும்பாலான மக்கள்( கிட்டத்தட்ட தேசத்தின் எல்லா மக்களும்) மிகுந்த ஏழ்மையிலே தான் இருக்கிறார்கள். சந்தையில் என்ன எடுத்தாலும் அநியாய விலை. அங்கே அதிக அளவில் வளங்களும் இல்லை. ஆனால் அங்கே ஏகப்பட்ட வளங்களும் பிரம்மாண்டமான தொழில் வாய்ப்புகளும் இருப்பதாக தன் நண்பர் சந்தோஷ்  சொன்ன தவறான தகவல்களை நம்பிக் கொண்டு நாவலில் கதாநாயகனும் (இவர் சரவணன் சந்திரன் தானென்று நினைக்கிறேன்) தன்னுடைய வீட்டை விற்று பணத்தை தயார் பண்ணி சந்தோஷுடன் தைமூருக்கு கிளம்புகிறான். அங்கே போய் தர்மு ,காவியன் என்ற இரு தொழிலதிபர்களுடன் மற்றும் இன்னொருவருடன் இணைந்து நிறுவனம் தொடங்குகிறார்கள் . இவர்கள் தான் ஐந்து முதலைகள். இவர்களுடைய நிறுவனத்தின் பிராதான தொழில் கடல் அட்டையைப் பிடித்து வேக வைத்து அதை விற்பது. காரணம் இதை சூப்பாக்கிக் குடித்தால் ஆண்மைத் தன்மை அதிகரிக்குமாம். இதை உண்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று சொல்லி என்ன விற்றாலும் அதை எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் மிகப்பெரிய  கூட்டமே சீனாவில் இருக்கிறது . ஆனால் நிறுவனத்துக்கு நினைத்த அளவில் எந்த இலாபமும் இல்லை. இதற்கு முக்கியமான காரணம் தர்மு. அவர் மிகப்பெரிய முசுடு. தன்னோடு இருப்பவன் தன்னவிட முன்னேறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் சிரத்தையுடன் இருப்பவர். அவர் என்றைக்குமே தொழிலில் அக்கறையோடு ஈடுபடவில்லை. முடிந்த அளவுக்கு மற்ற பங்குதாரர்களை ஏமாற்றி செலவுக் கணக்குகளில் ஊழல் செய்கிறார். ஆனால் காவியன் ரொம்பவே நல்லவர். ஆனால் என்ன பயன். இவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம்.வேறு வழியின்றி கதாநாயகன் திரும்ப வந்து விடுகிறான்.

இவ்வளவு தான் கதைச் சுருக்கம். ஆனால் இதைத் தாண்டி இந்நாவலில் பேசப் பட வேண்டிவயை நிறைய உள்ளன. முக்கியமாக மொழிநடை. சரவணனின் மொழிநடை தைமூரையே நம் கண்முன் காட்டுகிறது. சரவணன் கதை சொல்லவில்லை. நம் கண்முன் கதையை காட்டுகிறார். இந்நாவலில் நாயகன்  சுவாரஸ்யங்களை விரும்பி அதைத் தேடி பயணிப்பவன்.சாகச மனநிலை கொண்டவன். அவனுக்கு நம்பிக்கைகள் கிடைப்பதில்லை. எவ்வளவு தடைகள் வந்தாலும் ஏதோ சில நிகழ்வுகளில் இருந்து ,தன்னை சுற்றி உள்ள மனிதர்களிடமிருந்து தனக்கான நம்பிக்கையை அவனே உருவாக்கிக் கொள்கிறான். பொறுத்தது போதும் பொங்கி எழு தோழா, தன் கையே தனக்குதவி  என்பது மாதிரியான பழைய தேய்ந்த ரெக்கார்டுகள் கிடையாது. இதில் சரவணன் காட்டுகிற தன்னம்பிக்கை வேறு மாதிரியானது . நம்மை உணர வைப்பது.
 இது நிச்சயாமாக சரவணன் சந்திரனாகவே தான் இருக்கும்.  ஏனெனில் அவருடைய முகநூல் பதிவுகளை நான் ஒன்று விடாமல் படித்துவிடுவேன். அதில் அவருடைய தொழில் முயற்சிகள், பயணங்கள் , தேடல்கள் என அவரைப் பற்றி நிறைய அறிந்து கொள்ளலாம்.
இதுபோல நாவலில் சரவணன் சொல்லியிருக்கக் கூடிய தகவல்கள் ஏராளம். நம்மைச் சுற்றி நாம் அறியாமல் திரை மறைவிலும் வெளிப்படையாகவும் இவ்வளவு விஷயங்கள் உலகில் நடக்கிறதா என்று பிரம்மிக்க வைப்பவை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வெட்டிக் கடத்துவதின் நோக்கம் என்ன, எத்தனை தண்டனை கொடுத்தாலும் இந்த மரக் கடத்தலை ஏன் நிறுத்தவே முடியவில்லை, இவற்றை இறுதியாக கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர் யார் என்பது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள். இதுமட்டுமல்லாமல் காஃபி லூவாஃக் கொட்டைகள், பறவைக் கூடு சூப்  ,கடல் அட்டைகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் தெரியும். நீங்களும் வாசிக்கும் போது பிரம்மிப்பீர்கள். தைமூருக்கு தொழில் செய்வதற்கு வேறு நாட்டிலிருந்து செல்லும் எல்லாருமே அங்கிருக்கும் மக்களை மிக ஏளனத்தோடு தான் பார்க்கிறார்கள். அவர்களைப் பொருத்த்மட்டில் அவர்கள் அந்த தேசத்தை முன்னேற்ற வந்தவர்கள். அங்கிருக்கும் மக்களோ மூடர்கள், அறிவே இல்லாத கூட்டம். அந்த முட்டாள் மக்கள் கூட்டத்துக்கு கருணை கொண்டு வேலை வாய்ப்பு அளிக்கிறார்கள் என்ற மனநிலைதான் அவர்களிடம் உண்டு. இது தைமூரில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இதே தான். நம்மையும் அப்படி ஒரு தொழிலதிபர் கூட்டம் இப்படி தானே நினைத்துக் கொண்டிருக்கும். நாமும் வேலை தருகிறார்கள்,சம்பளம் தருகிறார்கள் என்று மகிழ்கிறோம். ஆனால் நாட்டின் இயற்கை வளங்களை வேகமாக எப்படி அழித்து விடுகிறார்கள் என்பதையும் நம்மை யோசிக்க வைக்கிறது.
இந்நாவலில் சரவணன் காட்டியிருக்கும் முக்கியமான இன்னொன்று தொழிலில் மனிதர்களின் உறவு பற்றி. முக்கியமாக எத்தனை பெரிய நண்பர்கள் என்றாலும் கூட்டுத் தொழிலில் அவர்களால் அந்த நட்பை கொண்டு செல்ல முடிவதில்லை. எதாவது ஒரு புள்ளியில் விரிசல்கள் உண்டாகி விடுகிறது. அந்தப் புள்ளியும் மிக வேகமாகவே வந்துவிடுகிறது. தன்னுடைய இலாபம் கிடைத்தால் போதும் , அவன் என்ன ஆனால் என்று நாம் நினைக்கவில்லையென்றாலும், தொழில் அந்த நிலைக்கு நம்மைத் தள்ளுகிறது.

ஐந்து முதலைகளின் கதையில் பின்னடைவாக நான் நினைப்பது ஒன்றே ஒன்று தான். அது சரவணின் வார்த்தைத் தேர்வுகளின் பிரச்சனை. எளிதில் சரிசெய்து விடக் கூடியது தான். குடித்தேன், குடித்தோம், குடித்துக் கொண்டே இருந்தேன்,குடித்துக் கொண்டே இருந்தோம் என்று இந்தச் சொற்கள்  ஒவ்வொரு சில பக்கங்களுக்கும் பலமுறைகள் வந்து சலிப்படைய வைக்கிறது. அட போங்க பாஸ் என்று டென்ஷனாக்கி நம்மையும்  ஒரு ரவுண்டு அடிக்க வைத்துவிடுகிறது (சும்மா பேச்சுக்கு தானுங்க) .
இறுதியாக நான் ஏற்கனவே சொன்னது போல இந்த நாவல் நமக்குத் தருவது தன்னம்பிக்கையை தான். இறுதியான அத்தியாயங்களில் தன்னுடைய தோல்விகள் அவற்றைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் எல்லாவற்றையும் கடாசிவிட்டு,புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்ளும் கதாநாயகனின் மனவோட்டத்தை அட்டகாசமாக எழுதியிருக்கிறார் சரவணன். நம்பிக்கைதான் நம்மைச் செலுத்துகிறது. அதுதான் நம்மை வாழ வைக்கிறது. இன்றைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது ஒருநாள் நினைத்த எல்லாவற்றையும் செய்து முடிப்போம் என்று நம்மை ஓட்டிச் செல்கிறது. அது இல்லையென்றால் எதுவுமே முடியாது. இந்நாவலில் தினேஷன் சொல்லுகிற ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது . “வாழ்க்கை ஒரு காட்டாறு போல இருக்கும்பட்சத்தில் அதில் மிதக்கும் தக்கையைப் போல உன்னுடைய எண்ணங்களை மாற்றிவிடு. ஒரே விஷயத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காதே. அதுவும் ஒரு அனுபவம் எனக் கடந்துவிடு”.

இது சரவணன் சந்திரனின் முதல் நாவல் என்பது ஆச்சரியமானது . ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா இரண்டும் ஆர்டர் செய்திருக்கிறேன். :) வாழ்த்துகள் சரவணன் ப்ரோ. :)

அசோக்ராஜ்
14-12-2017

Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை