கோயில் குளந்தான் ஊருக்கு அழகு


எங்கு பார்த்தாலும் கொட்டுச் சத்தம், அதற்கு முன் ஆடுகிற கூட்டம், காதைக் கிழிக்கும் கோஷங்கள். இப்படித் தான் இருந்திருக்க வேண்டிய ஊர். ஆனால் இன்றைக்கு எந்தச் சலனமுமின்றி பெருமூச்சுடன் ஊர் உறங்கிக் கிடக்கிறது. இதற்கு முன் இப்பங்குனித் திருநாள் காலத்தில் எங்களூர் இப்படித்தானிருந்ததா என நினைக்கிற போது மனம் நிலைகொள்ளவில்லை. பங்குனி மாதத்தின் முதல் ஞாயிறன்று பொங்கல் சாட்டுதலில் தொடங்கி ஊர் தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கும். அன்றிலிருந்து ஊரில் ஒவ்வொருவருமே திருநாளை நோக்கி குதூகலித்துக் கிடப்பார்கள். மற்ற எந்தப் பண்டிகையையும் விட இப்பங்குனிப் பொங்கலையே கொண்டாடித் தீர்த்த மக்கள், இன்று வெறுமையுடன் வெயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் நாள் தொடங்கி இருபத்தியோரு நாட்களுமே மொத்த ஊரும் கோயிலைச் சுற்றிச் சுழன்று கொண்டுதானிருக்கும்.
இப்பொங்கலை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டுமென குதூகலித்துக் கிடக்கும் நாட்கள், இத்திருநாளை மட்டுமே நம்பி
கடை விரித்துக் கனவு கொள்ளும் எத்தனை சாலையோர பொம்மை வியாபாரிகள், துணி விற்பவர்கள், பலூன் கடைக்காரர், சிறுவர்களைக் கவர அவர் ஊதிக் காட்டும் புல்லாங்குழல் , பழச்சாறுக் கடைகள், ஓயாது இயங்கும் டீக்கடைகள் ,
வீடு நிரப்பிய சொந்தங்கள், விருந்தினர்கள், அவர்களோடு பேசிச் சிரித்த கதைகள், கூடி ருசித்த கறிக்குழம்பு, போகிறவரை நிறுத்தி வலிந்து கொடுத்த மோர்ப் பந்தல்கள் , மஞ்சள் நீரின் ஈரம் , அதன் மணம், தேர்கள், காவடிகள் , எத்திசையிலும் நிரம்பிக் கிடக்கும் வேண்டுதல்கள், மேளங்கள், அதில் ஆட்டங்கள், எண்ணிவிட முடியாத அக்கினிச் சட்டிகள்,
தன் அத்தனை துயரங்களும் இன்றோடு முடிந்துவிடுமென ஏக்கத்தோடிருக்கும் கண்கள், அதன் கண்ணீர், குலவைகள், ரசித்து ரசித்து நனைந்த வெயில், ஹூம். இக்கொள்ளை நோயினால் இவ்வருடம் எதுவுமில்லை. இத்தனையும் இன்றைக்கு எங்களூர் மக்களின் நினைவில் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இவையெல்லாம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஊரைப் பார்க்கும் போது இது என் ஊர் தானா என்றே மனம் கேள்வி கொள்கிறது. ஊர் என்பது தரைமேலிருக்கும்
கட்டிடங்களும் பொருட்களும் இடங்களும் மட்டுமேயல்ல. அது அத்தனை மக்களின் மனங்களையும் சேர்த்துப் பிணைத்திருக்கும் வலை என்பதை பொங்கல் விடுபட்டுப் போன இவ்வருடம் உணர்த்தியிருக்கிறது . என்னதான் கடவுள் என்பதில் நம்பிக்கையற்றுப் போனாலும் மனம் இப்பாடலை ஒலித்துக் கொண்டேயிருக்கிறது “கோயில் குளந்தான் ஊருக்கு அழகு, கோயில் இல்லா ஊர வெலக்கு”

Virudhunagar Mariamman - Photos | Facebook

Comments

Post a Comment

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை