என் இளமை நாட்கள்- ஜவஹர்லால் நேரு



நேரு எழுதிய ”என் இளமை நாட்கள்” புத்தகம் படித்தேன். உண்மையில் அற்புதமானது. சத்திய சோதனை போலவே .ஆனால் இது அளவில் மிகச் சிறிய புத்தகம். காந்தியைப் போலவே எந்த இடத்திலும் நேரு தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதவில்லை. அதுபோல தன்னைப் பற்றிய செய்திகளையே அவர் அதிகம் எழுதவில்லை. தன் தந்தை மோதிலால் நேருவைப் பற்றி விரிவாக, அவரது அத்தனை குணங்களையும் சொல்லியிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கம் பற்றியும், வீரர்களில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இருந்த மன வேறுபாடுகளை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.நேருவின் தந்தை மோதிலால் நேரு முதலில் தீவிரவாதிகளின் மீது ஆர்வம் செலுத்தியிருக்கிறார் , ஆனால் தீவிரவாதத்தின் மூலம் நீண்டகால பலன் எதுவும் கிடைக்காது என உணர்ந்து கொண்டவர் மிதவாதத்துக்கு ஆதரவாளரானார். ஜவகர்லால் நேரு பள்ளியிலும் கல்லூரியிலும் பாடப்புத்தகங்களை மட்டுமே படிக்கக் கூடியவராக இருக்கவில்லை. எப்போதுமே உலகில் நடக்கும் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டு இருந்திருக்கிறார். தான் படித்த செய்திகளை நண்பர்களிடம் விவாதிப்பதிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்கிறார். நேருவிற்கு படித்து முடித்தவுடன் ICS(Indian Civil Service) அதிகாரியாகும் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. ஆனால் தந்தை மோதிலால் அதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் ICS அதிகாரியானால் ,தன் அன்பு மகன் தன்னை விட்டு வெகு தூரம் பிரிந்து சென்று வேலை பார்க்க நேரிடலாம் .அவனை வெகுகாலம் தன்னால் பிரிந்திருக்க முடியாது .அதனால் அவனுக்கு அந்த வேலை வேண்டாம் என முடிவு செய்தார் மோதிலால். தந்தையின் முடிவை ஏற்றுக் கொண்ட நேரு ,பின் சட்டத்துறையில் பாரிஸ்டர் ஆனார். அதுவும் நல்லதே . இதன்மூலம் தான் நேருவுக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறும் ஆர்வம் வந்திருக்கிறது. ஒருவேளை ICS அதிகாரி ஆகியிருந்தால் ,சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் ஏற்படாமல் போயிருக்கக்கூடும். முக்கியமாக சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் தலைமை எத்தனை வலிமையானது என்பதையும் நாம் இந்த புத்தகத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும். காந்தியைப் பொருத்தவரையில் சுதந்திரத்தை வெள்ளையர்களை தாக்கி அழிப்பதின் மூலம் பெற்றுவிட முடியாது. அவர்களின் மூளையில் உள்ள ஆணவத்தை அழிக்க வேண்டும். அதற்கு ஆயுதங்கள் தேவையில்லை. அஹிம்சை அவசியம், ஒத்துழையாமை அவசியம் ,அதைவிட பொறுமை அவசியம். காந்தியின் கடிதம் எழுதும் முறையைப் பற்றி நேரு இப்படி விவரிக்கிறார் நேரு.

”நாம் வெள்ளையர்களுக்கு நம் கோரிக்கைகளை கடிதம் எழுதுபோது தேவையற்ற வீண் அழகுச் சொற்கள் , வாக்கியங்கள் கூடாது. நம் கோரிக்கையை நேர்மையுடன், சுருக்கமாக ,அழுத்தமாக எழுதிட வேண்டும். பின் நம் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரை போராடுவதை விடக்கூடாது. உயிரே போனாலும் சரி.அதுதான் முக்கியம்”

ஆர்.சி.சம்பத் அருமையாக புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
 
 

Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை