சந்திர பாபு - முகில்

முகில் எழுதிய சந்திரபாபு "கண்ணீரும் புன்னகையும்" படித்தேன். இதை வாழ்க்கை வரலாறு என்று சொல்வதை விட,மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் புத்தகமாக் கொள்ளலாம். முக்கியமாக பாராட்டப்பட வேண்டியது , முகில் அவர்களின் எழுத்து நடை. அது சந்திரபாபுவின் வாழ்க்கையை இன்னும் இன்னும் அதிக அழுத்தத்துடன் நமக்குச் சொல்கிறது. சந்திரபாபு என்னை ரொம்பவே பாதித்துவிட்டார்.இதைப் படிக்கும் முன்வரை , அவர் ஒரு காமெடி நடிகனாக மட்டுமே எனக்கு அறிமுகம்.ஆனால் அவர் செய்த நகைச்சுவைகளுக்குப் பின் உள்ள வலிகள் அதிகம் . உணவு இல்லாத நாட்கள் , உறக்கம் இல்லாத இரவுகள் அவர் வாழ்வில் ஏராளம். சந்திரபாபு எந்தத்
தோல்விக்காகவும் தேங்கிவிட்டதே கிடையாது. "போனால் போகட்டும் போடா" எனச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைத் துவங்கிவிடுவார். ஒருவரைப் பற்றி பிறரிடம் குறை பேச அவருக்குத் தெரியாது.ஏனெனில் நேரடியாக அந்த நபரிடமே சென்று அதைச் சொல்லிவிடுவார் . அதுதான் சந்திரபாபு ஸ்டைல் . பொய் சொல்லத் தெரியாத சந்திரபாபு , எதிரியாக இருந்தாலும் , அவனுக்குத் திறமை இருந்தால் பாய்ந்து சென்று முத்தமிடும் சந்திரபாபு , நன்றி மறக்காத சந்திரபாபு, யாருக்காவும் கனவுகளை விட்டுத்தராத சந்திரபாபு , சிறிய விஷயமானாலும் மிகச் சிறப்பாக செய்து முடிக்கும் சந்திரபாபு , நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத சந்திரபாபு ,யாருக்கும் அஞ்சாத சந்திரபாபு . மொத்தத்தில் சினிமாவுக்காக வாழ்க்கை முழுவதும் உழைத்துவிட்டு , விளம்பரம் காட்டிக் கொள்ளாமல் நம்மைப் பிரிந்து விட்ட சந்திரபாபு. சந்திரபாபு இறந்தபோது , M.S.விஸ்வநாதனும் , சிவாஜி கணேசனும் அழுத காட்சிகள் ரொம்பவே அழுத்தமானது . சந்திரபாபுவின் வாழ்க்கை அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியது. காணாமல் போன அந்தக் கலைஞனை , மிகக் கடினப்பட்டுச் சேகரித்து தொகுத்திருக்கிறார் முகில் . இதில் ஆச்சரியம் , இது முகிலுடைய முதல் புத்தகம். ஆனால் படிக்கும்போது அப்படித் தோன்றவேயில்லை .இளைஞர் என்றாலும் ,அனுபவம் மிக்க எழுத்து அவருடையது .திரைப்படத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் மட்டுமல்ல , அனைவருமே அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

~அசோக் ராஜ்.

 

Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை